எருமப்பட்டி வட்டாரத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம், ஜூன் 11: எருமப்பட்டி வட்டாரத்தில் குண்டுமல்லி விலை உயர்ந்து, கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நவலடிப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, காவக்காரன்பட்டி, முத்துகாபட்டி, பழையபாளையம், கோம்பை, போடிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். கொல்லிமலை அடிவாரத்தில் விளையும் பூக்கள் நன்கு திரட்சியாக, மணம் மிகுந்திருப்பதால் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்கின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து பூக்களை பறித்து நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூச்சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

பூக்களின் வரத்து அதிகரிக்கும் போதும், விலை குறையும் போதும் விவசாயிகள் பூக்களை பறித்து திருப்பூர், காங்கேயம், திண்டுக்கல் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட், நறுமண தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். எருமப்பட்டி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.320 வரை விற்கப்பட்டது. தற்போது முகூர்த்த தினங்கள், மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.360க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Related Stories: