சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு இல்லை; மக்களை ஏமாற்றவே வெள்ளை அறிக்கை: தேர்தலுக்கு முன்பு சொன்ன ரகசிய திட்டம் என்னாச்சு?

கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சிங்கப்பெண் படையில் உள்ள பெண் காவலர்களின் நகைகளே திருடப்பட்டுள்ளன. அந்த படையில் உள்ள காவலர்களே பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கின்றனர். சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்பது வெறும் பெயரளவுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது முதல்வர் விஜய்க்கு தேர்தலுக்கு முன்பு தெரியாதா? தேர்தலுக்கு முன்பு நடந்த பிரசாரத்தின்போது, தமிழகத்தின் நிதிநிலைமையை சீராக்க நாங்கள் ரகசிய திட்டங்கள் வைத்துள்ளோம், சொன்ன திட்டங்கள் அனைத்தையும் செய்து காட்டுவோம் என்று சொன்னார்களே, அந்த ரகசியம் என்ன? அதையெல்லாம் செயல்படுத்துங்கள். அன்றைக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு ஒரு பேச்சு என முதல்வர் விஜய் பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் எந்தவித கேள்வியையும் கேட்கக் கூடாது என நினைத்து, மக்களை ஏமாற்றுவதற்காக வெளியிடப்பட்டதே வெள்ளை அறிக்கை.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக செய்திகள் வந்தவுடன், அதை மறைப்பதற்காக ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி என அறிவிப்பு வெளியானது. தற்போது ஒரு நாளைக்கு 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வந்தவுடன், அதனை மறைப்பதற்காக ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழு கடன் தள்ளுபடி என அறிவித்துள்ளனர். அவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பவர்கள், ஷூட்டிங் எடுப்பவர்கள், நிஜத்தை அறியாதவர்கள், நடித்தே பழக்கப்பட்டவர்கள், அவர்கள் எந்தளவுக்கு தமிழகத்தை கொண்டு செல்லப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல் தவெக எம்எல்ஏவை விஜய் கண்டித்தாரா?
‘‘வைகுண்டம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை தவெகவில் இருந்து நீக்கிவிட்டனர். ஆனால் எதிர்தரப்பினர் மீது கட்சித் தலைமை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகுண்டம் எம்எல்ஏவை அழைத்து முதல்வர் விஜய் கண்டித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், புகார் அளித்த பெண்ணின் வீட்டுக்கு அடியாட்கள் சென்று புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவெகவைச் சேர்ந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது’’ என்று கீதாஜீவன் தெரிவித்தார்.

Related Stories: