திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அந்த பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன நெருக்கடி என்பது அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் மிகுந்த அதிர்ச்சி, கவலை அளிக்க கூடியதாக உள்ளது. அதிமுக ஒரு திராவிட இயக்கம் என்ற முறையில் அது வலுவாக, சிதறாமல் இருப்பது தான் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது. எம்ஜிஆர், ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தால் நல்லது.
விசிக முதன்மை செயலாளர் ஆளுநர் ஷானவாஸ் புதிய கட்சி ஆரம்பித்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற செய்தி தவறான தகவல். தலைமையோடு தொடர்பில் இருக்கிறார். வெளிநாடு சென்று வந்துள்ளார். விரைவில் என்னை சந்திக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்டு விசிகவை குறி வைத்து அவதூறு பரப்பப்படுகின்றன. விசிக எளிய மக்களுக்கான இயக்கம். இந்த இயக்கத்தை உடைத்து என்ன சாதிக்க போகிறார்கள். ஏன் இப்படி திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்று தெரியவில்லை. கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை, பிரச்சனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரத்தில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘108 இடங்களில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் சிறுத்தைகளின் இரண்டு இடங்கள் இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை தமிழக அரசியலில் வந்துள்ளது. விசிகவை தவிர்த்து விட்டு தமிழகத்தில் அரசு உருவாகாது. இதை நான் ஆணவத்தோடு, அகந்தையோடு சொல்லவில்லை. கள அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். தேர்தலில் முன்பு சந்தேகம் இருந்ததால் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை விஜய் என்று விமர்சித்தேன். ஆனால், தேர்தலுக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் ஆட்சியமைக்க ஆதரவு கோராமல், மதசார்பற்ற கூட்டணி கட்சிகளை நாடியதால் தேர்தலுக்கு முன்பு இருந்த தவெக மீதான சந்தேகம் தற்போது தெளிந்துவிட்டது’’ என்றார்.
