சென்னை: தவெக அரசு வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை அல்ல, அது வெற்று அறிக்கை என்றும், திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனை விட குறைவாக தவெக அரசு கடன் வாங்கினால் எனது பொறுப்பிலிருந்தே விலகி கொள்கிறேன் என்றும் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன்தினம் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வெள்ளை அறிக்கை என்பது உண்மையில் ஒரு வெற்று அறிக்கை. இது தவெக அரசின் நிர்வாக இயலாமையை மறைப்பதற்கான ஒரு உத்தியாகும். அவர்கள் தேர்தலின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தெளிவான திட்டமோ, வழிமுறையோ இல்லாததால், தங்களது இயலாமையை நியாயப்படுத்தும் முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றபோது ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது அன்றைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். தற்போது, 2026ம் ஆண்டு தவெக அரசு 3வது முறையாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2001ம் ஆண்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், அதற்கு முந்தைய 10 ஆண்டுகால நிதிநிலை விவரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதாவது 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சியும், 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியும் இடம்பெற்ற காலகட்டம். அதேபோல், 2021ம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகால நிதிநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக் காலமும், அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலமும் இணைத்து ஆய்வு செய்யப்பட்டு, முழுமையான நிதிநிலைப் பார்வை மக்களிடம் வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது 2026ம் ஆண்டு தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? ஏன் முந்தைய ஆட்சிக்காலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன? அந்த ஆட்சிகளின் நிதிநிலை நிர்வாகத்தைப் பற்றி பேசுவதில் என்ன தயக்கம்?
2021ம் ஆண்டு திமுக அரசு நிதிநிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டபோது, அதன் செயற்சுருக்கத்திலேயே தெளிவாக ஒரு கருத்தை பதிவு செய்திருந்தோம். அதாவது, நிதிநிலை எப்படியிருந்தாலும், மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கும் என்ற தெளிவான அரசியல் உறுதிமொழியை வழங்கினோம். ஆனால், 2026ம் ஆண்டு தற்போதைய அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையைப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் காண முடிகிறது. அந்த அறிக்கையிலேயே, தற்போதைய நிதிநிலை காரணமாக புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் நிர்வாக தோல்வியை ஒப்புக்கொள்வதாகவே இதற்கு அர்த்தம்.
அரசின் கடன் நிலையை மதிப்பிடும்போது அதன் வரலாற்றுப் பின்னணியையும், வளர்ச்சிப் போக்கையும் முழுமையாகப் பார்க்க வேண்டியது அவசியம். 2006-07ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றபோது, தமிழ்நாட்டின் மொத்தக் கடன் சுமார் ரூ.57,457 கோடியாக இருந்தது. அதன்பிறகு, 2011-12ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றபோது, அந்தக் கடன் ரூ.1,00,350 கோடியாக உயர்ந்திருந்தது. அதாவது, அந்தக் காலகட்டத்திலேயே கடன் ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்தது. அதேபோல், 2016-17ம் ஆண்டில் அந்தக் கடன் ரூ.2,11,066 கோடியாக உயர்ந்தது. மீண்டும் ஒரு முறை கடன் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அதை தொடர்ந்து, 2021-22ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கடன் சுமார் 2.7 மடங்கு உயர்ந்திருந்தது.
இப்போது, திமுக ஆட்சி முடிவடைந்தபோது கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டதாக கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், வரலாற்று தரவுகளைப் பார்த்தால், தமிழ்நாட்டின் கடன் வளர்ச்சி என்பது ஒரு தொடர்ச்சியான போக்காக இருந்து வருகிறது. எனவே, 4.85 லட்சம் கோடியை திமுக அரசு 10 லட்சம் கோடியாக மாற்றிவிட்டது என்று தனிமைப்படுத்தி கூறுவது முழுமையான உண்மையை பிரதிபலிப்பதில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு ஆண்டுக்கு சராசரியாக பெற்ற கடனை விட, உங்கள் ஆட்சியின் ஒவ்வொரு ஆண்டிலும் குறைவான கடனை மட்டுமே பெற்றோம் என்பதை நீங்கள் நிரூபித்துக் காட்டுங்கள். அதே நேரத்தில், திமுக அரசு தொடங்கி வைத்துள்ள வளர்ச்சித் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களையும் நிறுத்தாமல், உங்கள் தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதேசமயம் திறமையான நிதி நிர்வாகத்தையும் மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் செய்து கொண்டே, திமுக ஆட்சியின் சராசரி வருடாந்திர கடன் பெறுதலைவிட குறைவான கடனை மட்டுமே பெற்றோம் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டால், நான் எனது பொறுப்பிலிருந்து விலகத் தயார்.
இன்ட்ரஸ்ட் பேமென்ட் தொடர்பாகவும் அவர்கள் சில ஒப்பீடுகளை முன்வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டை குஜராத் மாநிலத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால், குஜராத்தின் சமூக நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. இதன் விளைவாக, நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் தேவைகள் அதிகமாக இருப்பது இயல்பான ஒன்றாகும். ஆனால், இந்த நலத்திட்டங்களுக்காக செலவழிப்பதையே குற்றமாக சித்தரித்து, நீங்கள் அதிகமாக செலவழித்துவிட்டீர்கள், மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறுவது எந்த அளவுக்கு நியாயமானது?
பெண்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவோம், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி, 200 யூனிட் இலவச மின்சாரம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைகளை உயர்த்துவோம் என்றீர்கள். இந்த வாக்குறுதிகளில் எது மூலதனச் செலவுத் திட்டம். இப்போது மிகப்பெரிய விளம்பரத்துடன் தொடங்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் திட்டம்’ கூட ஒரு சமூக நலத் திட்டம் தான். அதற்கான செலவு மூலதனச் செலவா? இல்லை. அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அந்தத் திட்டத்திற்கான செலவும் வருவாய்ச் செலவாகத்தான் இருக்கும். அது மூலதனச் செலவாக மாறாது.
அப்படியானால், மூலதனச் செலவுகள் குறித்து இன்று நீங்கள் முன்வைக்கும் விமர்சனத்தின் அடிப்படை என்ன? உண்மையில், மூலதனச் செலவுகள் அதிகமாக இடம்பெறும் திட்டங்களைத் தான் நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் நிறுத்த முயற்சித்தீர்கள். சென்னை உயர்மட்ட விரைவுச்சாலை திட்டத்தை நிறுத்த வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த பல்வேறு சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினீர்கள்.
எங்கெல்லாம் பெரிய அளவிலான மூலதன முதலீடுகள் இடம்பெறுகிறதோ, அந்தத் திட்டங்களின் மீதுதான் முதலில் தாமதப்படுத்தம் முயன்றுவிட்டு இன்று மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் பொருத்தமானதாக இருக்கும்?
திமுக அரசு 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகுதான் வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், படிப்படியாகக் குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2020-21ம் ஆண்டில் ரூ.62,325 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் கணிசமாகக் குறைக்கப்பட்டது. அதேபோல், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறையின் விகிதம் 2021ம் ஆண்டில் 3.48 சதவீதமாக இருந்தது. அதை தொடர்ந்து குறைத்து, 2024-25ம் ஆண்டில் 1.47 சதவீதமாகக் கொண்டு வந்தோம். இது நிதி ஒழுங்குமுறையையும், பொறுப்பான நிதி நிர்வாகத்தையும் வெளிப்படுத்துகிறது.ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் 2024-25ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.78,000 கோடியாக உயர்ந்துள்ளது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. அது ஏன் உயர்ந்தது என்பதற்கான காரணங்களை முழுமையாக விளக்க வேண்டாமா?
ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்காததால், மொத்தமாக ரூ.41,411 கோடிக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைகளை வெள்ளை அறிக்கையில் எங்காவது குறிப்பிட்டுள்ளார்களா? அவற்றை வசதியாக மறைத்துவிட்டு, ரூ.78,000 கோடி வருவாய் பற்றாக்குறையை மட்டும் சுட்டிக்காட்டி, அது முழுவதும் தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மை குறைபாட்டால் ஏற்பட்டது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ரூ.78,000 கோடி வருவாய் பற்றாக்குறையைப் பற்றி பேசும்போது, அதில் ரூ.41,000 கோடி வழங்காத ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகள், நிதி ஒதுக்கீடு குறைப்புகள் மற்றும் வரி பகிர்வு சிக்கல்கள் பற்றியும் மக்களிடம் நேர்மையாக விளக்கியிருக்க வேண்டாமா?
நீங்கள் கூறும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுங்கள். வருவாய் கசிவுகளை தடுங்கள். வருவாயை அதிகரியுங்கள். அதன்பிறகு, திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டை தாக்கல் செய்யும்போது, இந்த நடவடிக்கைகளின் மூலம் எவ்வளவு கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது என்பதை மக்களிடம் வெளிப்படையாக தெரிவியுங்கள். அதனை நானும் அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மாநிலத்தின் சொந்த வருவாய் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி இடையேயான விகிதம் குறைந்துவிட்டதாகவும், அது 5.95 சதவீதத்திலிருந்து 5.45 சதவீதமாக சரிந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இதற்கும் வருவாய் கசிவுகள்தான் காரணம் என்று வாதிடுகிறார்கள். ஆனால், அதற்கான விளக்கத்தை நான் ஏற்கனவே பலமுறை அளித்திருக்கிறேன். இந்த வீழ்ச்சி திமுக ஆட்சியில் தொடங்கிய ஒன்று அல்ல. 2011ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பிலிருந்து விலகியபோது, மாநில சொந்த வருவாய் மற்றும் ஜிஎஸ்டிபி விகிதம் சுமார் 7.9 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு, 2021ம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சியை விட்டு வெளியேறியபோது அது சுமார் 5.46 சதவீதமாகக் குறைந்திருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்த விகிதம் 6.33 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. எனவே, இந்த பிரச்சினையை முழுமையாக திமுக ஆட்சியின் மீது சுமத்துவது உண்மைக்கு புறம்பானதாகும்.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் மூலம் வருவாய் உயர்வு ஏற்படும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிலான வருவாய் வளர்ச்சி ஏற்படவில்லை. பல துறைகளில் விற்பனை மந்தநிலை உருவானது. அதன் தாக்கம் ஜிஎஸ்டி வசூலிலும் பிரதிபலித்தது. இந்த பாதிப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. கர்நாடகா, கேரளா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களும் இதே சவாலை எதிர்கொண்டுள்ளன.
கமிட்டட் எக்ஸ்பென்டிசர் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்குவதற்கு உறுதியளித்துள்ளது. இவை அனைத்தும் அரசின் பொறுப்பேற்ற செலவுகள்தான். இந்த கமிட்டட் எக்ஸ்பென்டிசர்கள்தான் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன என்று நீங்கள் கருதினால், இத்திட்டங்களை நிறுத்தத் தயாரா? போக்குவரத்துக் கழகத்தை எடுத்துக்கொண்டால், 2011ம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடைந்தபோது அதன் கடன் சுமார் ரூ.8,844 கோடியாக இருந்தது. 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவடைந்தபோது அது சுமார் ரூ.39,884 கோடியாக உயர்ந்திருந்தது.
அதேபோல், தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் நிலையும் இதே போக்கில்தான் இருந்தது. திமுக ஆட்சி முடிவடைந்தபோது சில ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கடன், அதிமுக ஆட்சி முடிவில் ரூ.1.35 லட்சம் கோடியைத் தாண்டியிருந்தது. இந்தக் கடன்கள் எதற்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் உருவாகிறது. இப்போது தற்போதைய அரசும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு புதிய இலவச மற்றும் நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது. அவற்றை நிறைவேற்றுவதற்கும் நிதி தேவைப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் மீது கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். எனவே, கடந்த அரசுகளை விமர்சிப்பதற்கு பதிலாக, ஐந்து ஆண்டுகள் முடிவில் இந்த பொதுத்துறை நிறுவனங்களின் கடனை எவ்வளவு குறைத்தீர்கள் என்பதை மக்கள் முன் வைத்து பேசினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும்.மேலும், ஆண்டுதோறும் மூலதனச் செலவுகளுக்காக ரூ.50,000 கோடி அல்லது அதற்கு மேல் ஒதுக்க விரும்பினால், மாநிலத்தின் மொத்தக் கடன் மேலும் உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும். கடனை முழு எண்ணிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது. மாநிலத்தின் பொருளாதார திறன், வருவாய் வளர்ச்சி மற்றும் கடன், ஜிஎஸ்டிபி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். நிதி குறைவாக உள்ளது, புதிய திட்டங்களை செயல்படுத்த சிரமம் உள்ளது என்று கூறுவது, உண்மையில் உங்கள் ஆட்சியின் இயலாமையையே வெளிப்படுத்துகிறது. இன்று தமிழ்நாட்டு மக்கள் முன் வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மையான வைட் ஓபன் சீக்ரெட் என்னவென்றால், இந்த அரசின் இயலாமையே. இவ்வாறு அவர் கூறினார்.
எங்களிடம் எதையும் எதிர்பார்க்காதீங்க
இன்று சட்டசபை கூடுகிறது. ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள், புதிய கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். ஆனால் அத்தகைய புதிய திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்போ, நிதி வலிமையோ தங்களிடம் இல்லை என்பதை முன்கூட்டியே மக்களுக்கு உணர்த்தும் நோக்கத்தில் தான் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எங்களிடம் இருந்து எந்தப் புதிய அறிவிப்புகளையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பதை உணர்த்தவே வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் என தங்கம் தென்னரசு கூறினார்.
தவெக ஆட்சியில் தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாகும்
தங்கம் தென்னரசு கூறுகையில், ‘‘தவெக அரசு முழுமையான ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்து அடுத்த தேர்தலை சந்திக்கும் சூழல் உருவானால், அந்த ஆட்சியின் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என்பது என் கணிப்பு மட்டுமல்ல, நிதி நிர்வாகத்தின் தற்போதைய போக்கின் அடிப்படையில் தவிர்க்க முடியாத யதார்த்தம்’’ என்றார்.
