சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதேபோல, தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் தேர்தல் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சிவராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக தொகுதி வாக்காளர் மருதுகணேஷ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருவெறும்பூர் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜியின் வெற்றியை எதிர்த்து திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏ சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் பெரியசாமி ஆகியோரும் தேர்தல் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதேபோல, திருமயம் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏ ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி, மானாமதுரை தொகுதியில் 1,208 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏ இளங்கோவனுக்கு எதிராக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தமிழரசி, மயிலம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் குணசேகரன் என்பவரும் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
புதுச்சேரியில், காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெற்ற லட்சிய ஜனநாயக கட்சி எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் வெற்றிபெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் விஸ்வநாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடுகள் செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், இவர்களது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
