சென்னை: திருவள்ளூரில் 7ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (25) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆட்டோ ஓட்டுநர் குறித்து சிங்கப் பெண் படைக்கு தாய் தகவல் தெரிவித்தை அடுத்து அந்த ஆட்டோ ஒட்டுநர் நந்தகுமாரை பிடித்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தது சிங்கப் பெண் சிறப்பு படை.
பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஓட்டுநர் போக்சோவில் கைது செய்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று ஓட்டுநர் சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் கார் ஓட்டுநர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம் அடுத்த படப்பை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர். சிறுமி கூச்சலிடவே வட மாநில இளைஞரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கி மணிமங்கலம் காவல்நிலையத்தில் மக்கள் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே ஆனந்த நகர் தேவாலயத்தில் பணியாற்றிய மதபோதகர் அருள்ராஜ், தேவாலயத்திற்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுமி தாயிடம் விவரங்களை பகிர்ந்ததையடுத்து, குடும்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அருள்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடி படை எங்கே போனது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அரசுக்கு எதிராக கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்தி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி வருகிறது.
