வால்பாறை : மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகிய மலைநகரான வால்பாறையில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தேயிலை தோட்டங்களை தென்மேற்கு பருவ மழை இயற்கை எழில் மிகுந்த பசுமைப் படலமாக மாற்றியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தேயிலை சாகுபடி, இன்று வால்பாறையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. மலைச்சரிவுகள் முழுவதும் ஒழுங்காக வளர்க்கப்பட்ட தேயிலைச்செடிகள், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சமாக உள்ளன.
தேயிலை தோட்டங்களின் நடுவே அமைந்துள்ள குடியிருப்புகள், தொழிலாளர் குடியிருப்புகள், நீரோடைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் இணைந்து வால்பாறைக்கு தனித்துவமான இயற்கை சூழலை உருவாக்கியுள்ளன. அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் சூழ்ந்த தேயிலை தோட்டங்களின் காட்சியும், மாலை நேரங்களில் பசுமை போர்த்திய மலைகளின் தோற்றமும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
வால்பாறையில் உற்பத்தியாகும் உயர்தர தேயிலை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் தேயிலைத்தொழில் தாங்கி நிற்கிறது என்பது மட்டுமே உண்மை.
