*கலெக்டர் நேரில் ஆய்வு
சேந்தமங்கலம் : கொல்லிமலையில் ரூ.340 கோடியில் நடந்து வரும் நீர்மின் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொல்லிமலை ஒன்றியம், வளப்பூர் நாடு ஊராட்சியில், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருந்து கொண்டிருக்கும். தொடர் மழை காலங்களில் அதிகமாகவும், கோடை காலங்களில் மிதமாகவும் தண்ணீர் வரத்து இருக்கும்.
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் தண்ணீர் முழுவதும், வனப்பகுதி வழியாக சென்று துறையூர் அருகே உள்ள மற்றொரு அடிவார பகுதியான புளியஞ்சோலை அய்யாற்றில் சென்று கலக்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி 20 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் திட்டம், தமிழக மின்சார வாரியத்தால் உருவாக்கப்பட்டு, இந்த திட்டப்பணிகள் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.340 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.
இந்த நீர்மின் திட்டத்தை பொறுத்தவரை, முதல் கட்டமாக கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலை ஒட்டியுள்ள அசக்காட்டுப்பட்டி, தெள்ளியங்காடு, கடம்பள்ளம், இருங்குளிப்பட்டி, கோயிலூர் ஆகிய கிராம பகுதிகளில் தடுப்பணை கட்டுவதற்காக பழங்குடியின மக்களின் நிலம், வனத்துறை நிலம், அரசு சார்ந்த நிலங்கள் கையகப்படுத்தி கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
அதன் பிறகு 3.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்தது. செல்லிப்பட்டி கிராமத்திலிருந்து ராட்ச குழாய்கள் மூலம், தண்ணீரை தடுத்து, அங்கு 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பணிகளை, கலெக்டர் மதுபாலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்சந்திரசேகர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
