*தொழிலாளர்த்துறை எச்சரிக்கை
ஊட்டி : அபாயகரமான தொழில்களில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்தறை சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது.
இதில், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சும பவ்யா தண்ணீரு கலந்துக் கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986, 01.09.2016 முதல் குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டாண்டு சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். இரண்டாம் முறையாக இச்சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை கண்டறியும் பட்சத்தில் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், தொழிலாளர் உதவி ஆணையர்கள் ராஜ்குமார், முருகேசன், ஹேமலதா, கூடலூர் லட்சுமி நாராயணன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
