×

‘டேட்டிங் ஆப்ஸ்’ மூலம் டுபாக்கூரின் காதல் வலையில் விழுந்து ரூ.52 லட்சத்தை பறிகொடுத்த பெண் நீதிபதி: குற்றவாளிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

 

புதுடெல்லி: டேட்டிங் ஆப் மூலம் காதல் வலையில் விழுந்த பெண் நீதிபதியிடம் 52 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவருக்கு, கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ‘டிண்டர்’ என்ற டேட்டிங் ஆப் செல்போன் செயலி மூலம் ஒரு நபர் அறிமுகமானார். அந்த நபர் தன்னை அபிமன்யு வசிஷ்ட் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், ஒன்றிய அரசு துறையில் உளவு அதிகாரியாகப் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். இதனை நம்பிய பெண் நீதிபதிக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி நீதிபதியிடமிருந்து பல்வேறு தவணைகளாக மொத்தம் 52 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி லாபத் தொகை கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நீதிபதி, இந்த விவகாரத்தில் தனது பெயர் வெளியே தெரிந்தால் கவுரவம் பாதிக்கும் எனக் கருதி, தனது வீட்டில் பணிபுரியும் வேலைக்காரப் பெண்ணின் பெயரில் போலீசில் புகார் அளித்தார். இந்த மோசடி புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சவுரப் பிரதாப் சிங் லாலர், குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் உள்ள ஒரு நீதிபதியே, உண்மையை மறைத்து தனது வீட்டு வேலைக்காரியின் பெயரில் மாற்று வழியில் நீதிமன்றத்தை அணுகியது ஏற்கத்தக்கதல்ல.

தனிப்பட்ட சங்கடங்கள் ஒரு குற்றவியல் விசாரணையின் நேர்மையைச் சிதைக்க அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பெண் நீதிபதி விரைவில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி, வாட்ஸ்அப் மற்றும் டிண்டர் உரையாடல்கள் உள்ளிட்ட முழுமையான உண்மைகளைத் தெரிவிக்க வேண்டும்’ என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Delhi court ,Delhi ,New Delhi ,Haryana ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...