×

மக்கள் கோபமாக இருப்பதால் அடுத்த தேர்தலில் வெற்றி நமதே: இந்தியா கூட்டணி கூட்டத்தில் ராகுல் நம்பிக்கை

புதுடெல்லி: டெல்லியில் திங்களன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் சுமார் 9 நிமிடங்களுக்கும் மேலாக தான் ஆற்றிய உரையை ராகுல்காந்தி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார். கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி குறித்து கூறப்பட்ட கருத்துக்களுக்கு பதில் அளிப்பது எனது பணி அல்ல.

சைவ மரபில் உள்ளது போல அனைத்தையும் உள்வாங்குவதே எனது பணியாகும். அதாவது அனைத்து விஷத்தையும் அருந்தும் சிவபெருமானின் பாத்திரம் அது . நீங்கள் இன்னும் என்ன சொல்ல விரும்பினாலும், அது என் மீதோ அல்லது காங்கிரஸ் கட்சியின் மீதோ உங்களுக்கு என்ன விமர்சனம் இருந்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம். மகிழ்ச்சியுடனும், முகத்தில் புன்னகையுடனும் ஏற்றுக்கொள்வோம்.

நாங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்போம். ஏனெனில் எங்களது பங்கு உங்களது பங்கிலிருந்து அடிப்படையில் மாறுபட்டது. இதனை நான் ஆணவத்துடன் சொல்லவில்லை. உங்களில் பலர் கூறியது போல அன்பு மற்றும் பாசத்துடன் உங்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் பங்கு. கூட்டணி கட்சிகளுடன் சண்டையிடுவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. உண்மையான பிரச்னை என்னவென்றால் இந்திய அரசின் அதிகாரக் கட்டமைப்புகளை ஆர்எஸ்எஸ் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது தான்.

வெற்றி பெறுவதற்கு ஏற்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் சூழல் உங்களுக்கு கிடைக்காது என்பதே பிரச்னை. அரசியல் கட்சிகளால் செயல்பட முடியாவிட்டால் எது செயல்படும்? எதிர்ப்பு செயல்படும். நாம் எங்கு எதிர்த்து நிற்கிறோமோ அங்கு அது பலனளிக்கிறது. அதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன்.

எதிர்ப்பு என்பது பலனளிக்கும் ஒன்றாகும். ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது தான் சவால் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அடுத்த தேர்தல் ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டது. இந்திய மக்களிடையே எந்தளவுக்கு கோபம் இருக்கிறதென்றால் அடுத்த தேர்தல் முடிவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது” என்று பேசியுள்ளார்.

Tags : Rahul ,India Alliance ,New Delhi ,Delhi ,Lok Sabha ,Opposition ,Rahul Gandhi ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...