பெங்களூரு: 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் வக்கீல் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்த வக்கீல் பிரியங்கா(39). இவர் தனது கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறார். இவருக்கு வென்னெலா என்ற 5 வயது சிறுமி உண்டு. பெண் வக்கீல் பிரியங்காவின் காதலன் மோகன். கடந்த மார்ச் 24ம் தேதி பிரியங்கா தனது காதலன் மோகன் மற்றும் ஐந்தரை வயது வெண்ணிலாவுடன் காரில் வெளியே சென்றார்.
அன்று இரவு குழந்தை பிரியாணி சாப்பிட்டதாகவும், மறுநாள் காலை இறந்து கிடந்ததாகவும் பிரியங்கா தனது கணவரிடம் தெரிவித்தார். ஆனால் பின்னர், கோலாரில் உள்ள ஒரு உணவகத்தில் தானும் மோகனும் பிறந்தநாளைக் கொண்டாடியபோது வெண்ணிலாவை ஏசி வசதி கொண்ட காரில் தூங்க வைத்திருந்ததாகவும், வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு மறுநாள் அவள் இறந்து கிடந்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த கணவர் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் ஐஸ்கிரீம் கேட்டு அழுத குழந்தையை காதலன் மோகன் அடித்துக்கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து மோகனை முதலில் கைது செய்தனர். இதுதொடர்பாக கடுகோடி காவல் நிலையத்தில் ஜூன் 4 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரியங்கா பெங்களூருவிலிருந்து தப்பிச் சென்றார். சக்லேஷ்பூர் விடுதியில் பதுங்கியிருந்த வக்கீல் பிரியங்காவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில் அலட்சியமாக இருந்த இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, நிங்கராஜு உள்பட 3 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
