மதுரை: மதுரை அழகர்கோவில் மலை மீது அமைந்துள்ள சோலைமலை முருகன் கோயிலில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்விற்காக நேற்று வந்தார். அப்போது, கோயிலில் இருந்த பக்தர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள், ‘‘சென்னை உள்ளிட்ட நீண்ட தூரத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த எங்களை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்கிறார் என்பதற்காக வெளியே போகச் சொல்வது என்ன நியாயம்’’ என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அமைச்சர் கோயிலில் வெளிப்பகுதியில் அமைந்துள்ள தேங்காய் கடையை ஆய்வு செய்தார். ‘‘தேங்காய், பழங்கள் எவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்’’ என்றார். இதற்கு ரூ.200க்கு விற்பதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் கோயில் அதிகாரி ஒருவர், ‘‘100 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்’’ என்றார். இதற்கு அமைச்சர், ‘‘இருவேறு பதில்களாக இருக்கிறதே? விலைப்பட்டியலை பக்தர்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்’’ என்றார்.
அப்போது அமைச்சரிடம் ஒருவர், ‘‘இங்கு நடைபெறும் கடை ஏலத்தில் ஒரு தரப்பினர் மட்டுமே கலந்து கொண்டு ஏலம் எடுக்கிறார்கள். மற்றவர்கள் யாரையும் ஏலம் எடுக்க அனுமதிப்பதில்லை’’ என குற்றம் சாட்டினார். அதற்கு அமைச்சர், ‘‘முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, 18ம் படி கருப்பணசாமி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சரை கோயில் தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு, தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை. நாளொன்றுக்கு ரூ.240 மட்டும் வழங்கப்படுகிறது. பிஎப் பணம் பிடித்தாலும் அதற்கு முறையான தகவல் இல்லை என்றனர். இதையடுத்து அமைச்சர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை ரத்து செய்து, புதிய ஒப்பந்ததாரரை நியமிக்குமாறு கூறி கிளம்பி சென்றார்.
