- எஸ்ஐ
- உயர்நீதிமன்றத்தில்
- CBCID
- மதுரை
- மதுரை உயர் நீதிமன்றம்
- பெருமாள் சேத்
- மருதம்புதூர்
- Alankulam
- தென்காசி மாவட்டம்
- நீதிமன்றம்
மதுரை: பனை விவசாயியை காவலர் துப்பாக்கியால் சுட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம் பூத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் மணிகண்டன், பதநீர் இறக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஏப்ரல்7-ல் ஆலங்குளம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் சில போலீசார் சீருடை அணியாமல் எங்கள் வீட்டிற்கு வந்து மணிகண்டனை அழைத்துச் சென்று, பனை மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா எனப் பார்க்க கூறியுள்ளனர்.
இந்த நிலையில், மணிகண்டன் மரம் ஏறும் போது சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார். இதனை அங்க நின்றிருந்த நான் மற்றும் எனது பேத்தி ஆகியோர் தட்டிக்கேட்டோம். எங்களை போலீசார் மிரட்டினர். மணிகண்டன் மரத்தில் இறங்கி வந்த போது அவரை சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார். இதில் மணிகண்டனின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்ளூர் போலீசார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே என் மகன் போலீசாரால் சுடப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றவும், அதுவரை விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவசாயி மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
