×

குமரியில் அடிக்கடி ரத்தாகும் அரசு பஸ்: நடுவழியில் பஸ்சை நிறுத்தி பெண் பயணிகளை திட்டிய டிரைவர்

 

நாகர்கோவில்: தமிழகத்தை பொறுத்தவரை குமரியில் மட்டுமே தனியார் பஸ்கள் இயக்கம் கிடையாது. அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் சில வழித்தடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் கண்டக்டர், டிரைவர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் விடியல் பேருந்துகள் சிலவற்றில், பெண் பயணிகளிடம் அலட்சியமாக பேசும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கிறது. குறிப்பாக வடமதி என்று அழைக்கப்படும் 4 ரூட்டில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்வது, ராங்சைடில் ஏறி இருசக்கர வாகன ஓட்டிகளை நடுங்கச்செய்வது, பயணிகள் ஏறும் முன்பே பஸ்களை இயக்குவது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடைபெற்று வருகின்றன. காலை, மாலை பீக் அவர்சில் 4வழித்தட பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பெண் பயணிகள் கூட படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணம் செய்யும் நிலையே அனைத்து பஸ்களிலும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் புத்தேரி மருத்துவமனை சந்திப்பில், நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை செல்லும், பஸ்சில் சில பெண் பயணிகள் ஏறினர்.

படிக்கட்டில் ஏறிக் கொண்டிருக்கும் போதே கதவுகளை மூடிவிட சில பயணிகள் மீது கதவு இடித்தது. உடனே பெண் பயணிகள், படிக்கட்டில் ஏறிய பிறகு கதவை மூடலாமே எதற்காக அவசரம் எனக்கேட்டனர். இதனால், கோபம் அடைந்த டிரைவர் புத்தேரி மேம்பாலம் ஏறும்பகுதியில் பஸ்சை நடுவழியில் நிறுத்தியதுடன், திடீரென கதவுகளை திறந்தார். இதனால், படிகட்டு கதவை பிடித்தபடி நின்றிருந்த பெண் பயணிகள் மீண்டும் கதவிடுக்கில் சிக்கி நிலைதடுமாறினர். அப்போது, டிரைவர் என்னாலும் பேசமுடியும். பஸ் படிக்கட்டில் நீங்கள் ஏறுவது எனக்கு தெரியாது. இப்போது, பஸ்சிற்குள் வந்தால் தான் பஸ்சை எடுப்பேன் என்று கூறி வாக்குவாதம் செய்ததோடு சுமார் 5 நிமிடங்கள் பஸ்சை நிறுத்தினார்.

இதற்கு பெண் பயணிகளும் கடும் கண்டனம் தெரித்த நிலையில், கண்டக்டரிடம் முறையிட்டனர். இதனையடுத்து அவர்களை சமரசம் செய்த கண்டக்டர் அதன் பின்னர், பெண் பயணிகள் படிக்கட்டிலிருந்து உள்ளே ஏறியதை உறுதி செய்த பின்னர், பஸ் புறப்பட்டு சென்றது. இனியாவது, பெண் பயணிகள் மட்டுமின்றி பயணிகளிடம் டிரைவர், கண்டக்டர்கள் கனிவுடன் நடந்து கொள்ள உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

அடிக்கடி ரத்தாகும் 4 இ பஸ்
குமரியில் ஒற்றை தட கிராமங்கள் அதிகம். பூதப்பாண்டி அருகே சீதப்பால் ஒற்றை தடமாகும். அசம்பு சாலையில் இருந்து 2 கி,மீ தொலைவில் உள்ளது. இங்கு (தடம் எண் 4இ) ஒரு விடியல் பயண பேருந்தும், ஒரு டி.எஸ்.எஸ் பஸ்சும் இயங்கி வருகிறது. 2 பஸ்களுமே கடந்த பல ஆண்டுகளாக மிகவும் ஓட்டை உடைசலாக இயக்கபட்டு வருகின்றன. மிகவும் கூட்டம் இருந்தும் புதிய பஸ்களை ஏனோ கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீதப்பாலுக்கு இயக்காமல், பழைய பஸ்களையே போக்குவரத்து கழக அதிகாரிகள் இயக்குகின்றனர்.

மழை பெய்யும் போதும் பஸ்சில் அனைத்து இருக்கைகள் மீதும் மழை நீர் பாய்வதால், குடை பிடித்து கொண்டுதான் செல்ல வேண்டியது உள்ளது. ரெட் பஸ்கள், தற்போது மஞ்சள் மற்றும் புதிய மகளிர் விடியல் பஸ்கள் அனைத்து 4 வழித்தடத்தில் இயக்கப்படும் போது, ஏனோ சீதப்பாலுக்கு மட்டும் பழைய காயலான் கடை பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது. அதிலும், கடந்த ஒரு மாதமாக காலை பீக் அவர்ஸ், மாலை பீக் அவர்சில், 4 இ பஸ்கள் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு விடுகிறது.

இதனால், மாணவிகள் மற்றும் கடைகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, அவை வராவிட்டால், 2 கி,மீ நடந்து பூதப்பாண்டி அரசு மருத்துவமனை அல்லது துவரன்காடு வந்து பஸ் ஏற வேண்டியது உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், ஏற்கனவே படிக்கட்டில் நின்று வரும் பயணிகளுடன், முண்டியடித்து ஏறி நெருக்கிதள்ளிய நிலையில் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, இனியாவது, சீதப்பால் தடத்தில் புதிய பஸ்களை ரத்து செய்யாமல் இயக்குவதுடன், நெடுமங்காடு சாலையில் சீதப்பால் ஆற்றங்கரை காலனி வரை பஸ்சை நீட்டித்து இயக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumari ,Nagarko ,Tamil Nadu ,Dawn of Women ,
× RELATED நீலகிரியில் கோடை சீசனில் சர்க்கியூட்...