சென்னை: தங்கம் விலை கிடுகிடுவென சரிந்து, நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3200 குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே உயர்ந்து வருகிறது. அதற்கு முன்பு வரை மிகக் குறைந்த அளவில் தான் மாற்றம் இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு 2வது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, தங்கத்தின் விலையில் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டது.
குறிப்பாக, நடப்பாண்டில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. இருப்பினும் உலகில் பல்வேறு நாடுகளில் ஏற்படும் போர் காரணமாக பங்கு சந்தையானது ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600க்கும் விற்பனை ஆனது. 8ம் தேதி கிராமுக்கு ரூ.130ம், பவுனுக்கு ரூ.1,040ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 70க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560க்கும் விற்பனையானது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600க்கும், கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,200க்கும் விற்பனையானது. இந்நிலையில் ஈரான்- அமெரிக்கா இடையே நேற்று முன்தினம் மீண்டும் போர் உருவாகியுள்ளதால் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியுள்ளது.
அதன்படி, தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,800க்கும், பவுனுக்கு ரூ.3,200 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,10,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்திருந்த நிலையில், நேற்று அதிரடியாக ரூ.3,200 சரிந்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா இடையே போர் காரணமாக தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
