பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்குகளால் விபத்து ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சோளிங்கர், ஜூன் 11: சோளிங்கரில் எம்எல்ஏ அலுவலகம் அருகே பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்குகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோளிங்கரில் இருந்து சித்தூர்- திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் எம்எல்ஏ அலுவலகம், அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்பட்டதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ரூ.2 லட்சம் மதிப்பில் அண்ணா சிலை முன் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகள், முறையாக பராமரிக்கப்படாததால், உயர் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த 6 மின் விளக்குகளில், கடந்த சில மாதங்களுக்கு முன் 4 மின் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருந்தது.

இதையடுத்து 4 மின் விளக்குகள் மாயமானது. மீதமிருந்த 2 மின் விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. தற்போது அந்த 2 மின் விளக்குகள் பழுதடைந்து கடந்த இரண்டு வாரங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: