கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் ஆய்வு

ஆற்காடு, ஜூன் 11: ஆற்காட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூட கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மாதம் நடந்த தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரங்கள் ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டது.

அதில் மொத்தமுள்ள 1,247 வாக்குச்சாவடி மையங்களில் 1,494 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,494 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,620 விவிபேட்கள் என மொத்தம் 4,608 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை மைய குடோனில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் மூடி சீல் வைத்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாதாந்திரம் மற்றும் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் ராணிப்பேட்டை கலெக்டர் ந.ப்ரியா நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் நேரில் சென்று காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (விவிபேட்) அலகிலிருந்து தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முகவரி சீட்டுகள் அகற்றும் பணியை பார்வையிட்டார்.

மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டார். அப்போது டிஆர்ஓ பேபி இந்திரா, வருவாய் கோட்டாட்சியர் ராஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பூமா, தேர்தல் தாசில்தார் வசந்தி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: