விழுப்புரம், ஜூன் 9: விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மைஅமர்வுநீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், மகளிர், எஸ்சிஎஸ்டி சிறப்பு நீதிமன்றம், லஞ்சம்ஒழிப்பு ஊழல்தடுப்பு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் என சுமார் 20க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுஎப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்று நேற்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கு மிரட்டல் வந்துள்ளது.
உடனடியாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தையும், எஸ்பி அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திலிருந்து தகவல்தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் வெடிகுண்டுகண்டறியும் போலீசார் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்ற பணிகள் பாதிக்காத வகையில் ஒவ்வொரு அறைகளிலும், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். நீண்டநேரமாக நடந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் இமெயில் மூலம் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
