புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாநகராட்சி, முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வு கூடத்தில் நடைபெற்ற விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் கலந்துகொண்டு, அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்ததாவது:மாணவர்கள் தங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். மாணவர்களின் இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமாக அமையும். கல்வியுடன் ஒழுக்கம், பண்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக் கொண்டு எதிர்காலத்தில் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி, நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும்.

இன்றைய மாணவர்கள் வருங்கால தமிழகத்தின் தூண்கள் என்பதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்திடும் வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படக்கூடிய நலத்திட்டங்கள் ‘தொடர்ந்து’ கிடைக்கப் பெறுவதில் உறுதியாக உள்ளார். மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் வழங்கக்கூடிய விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள் பள்ளிகள் திறந்த முதல் நாளே அனைத்து பள்ளிகளிலும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படக்கூடிய இத்தகைய நலத்திட்டங்களால் பள்ளி மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றம் பெற்று வருகின்றனர்.அதன்படி 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தையும், உயர்ந்த மதிப்பெண்களையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குறிப்பாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் முதல் இடத்தையும், 94 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றும், 12ம் வகுப்பில் 95.88 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18வது இடத்தையும் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்திலும் மாணவர்கள் இதேபோன்ற கல்விச் சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், உதவி ஆணையர் (கலால்) திருமால், மாவட்ட கல்வி அலுவலர்கள் புஸ்பலதா (புதுக்கோட்டை), பழனிவேலு (தனியார் பள்ளிகள்), மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளி துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: