மயிலாடுதுறை, ஜூன் 9: மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் கிராமத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் கூறியதாகவும், அப்பகுதியில் நிலஎடுப்பு பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த இடத்தை வழங்கியதாகவும் கூறி திருநங்கைகள் 20 பேர் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு வள்ளாலகரம் கிராமத்திலோ, இல்லையெனில் மயிலாடுதுறை தற்காலிக பஸ் நிலையம் அருகிலோ குடியிருக்க பட்டா வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்துக்குள் யாரையும் விடாமல் வாசலை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் மார்க்சிஸ்ட கம்யூ. கட்சி நிர்வாகிகள் விஜய், ரவிச்சந்திரன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து தாசில்தார் சுகுமாறன் கூறுகையில், திருநங்கைகளுக்கு ஆரோக்கியநாதபுரத்தில் வீட்டுமனை வழங்க சுமார் 1 ஏக்கர் இடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வல்லாலகரம் கிராமத்தில் வீட்டுமனை பட்டா கேட்கின்றனர் என்றார். திருநங்கைகளின் போராட்டம் மாலை 6.30 மணிக்கு மேலும் தொடர்ந்து நடந்தது.
