பெரம்பலூர், ஜூன் 9: பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் கயைில் திருவோடு ஏந்தி நூதன முறையில் போராட்டம் தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் புது பஸ்டாண்ட் அம்மா உணவகம் முன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் சங்கத்தின் தலைவர் விசுவநாதன் தலைமையில், தவெக அரசிடம், முழு பயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு, நூதனமாக கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர். அதில், தேர்தலுக்கு முன் தவெக அரசு, தங்களது தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 சதவீதம் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி என அறிவித்து விட்டு, இப்போது ரூ. 50,000 வரை தான் பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவித்திருப்பது தமிழக விவசாயிகளை ஏமாற்றுவதாக உள்ளது.
விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளீர்கள். ரூ.50 ஆயிரம் பயிர்க்கடன் பெற்றவருக்கு ரூ. 50 ஆயிரம் என்றும், ரூ. 60ஆயிரம் பயிர் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 40 ஆயிரம் என்றும், ரூ. 80 ஆயிரம் பயிர்க்கடன் பெற்றவருக்கு ரூ. 20 ஆயிரம் என்றும், ரூ.90 ஆயிரம் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் என்றும் ரூ. ஒரு லட்சம் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 5000 தள்ளுபடி என்றும் அறிவித்துள்ளது ஏமாற்றமாக உள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே தங்களது தேர்தல் அறிக்கையில் கூறிய படி முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கையில் திருவோடு ஏந்தியபடி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி, மனுவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷரண்யா அறி-யிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.
