திடீரென டயர் கழன்று பள்ளி பேருந்து விபத்து

 

பெரும்புதூர், ஜூன் 9: பெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து கடந்த 4ம் தேதி முதல் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையும், நேற்று முதல் எல்கேஜி, யுகேஜி மற்றும் 5ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போந்தூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் – சிங்கபெருமாள்கோவில் சாலை வழியாக 40 மாணவர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது, போந்தூர் அருகே மாத்தூர் பகுதியில் சென்றபோது, திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரம் கழன்று ஓடியது. இதனால் பள்ளி மாணவர்கள் கூக்குரல் இட்டனர். சத்தம்கேட்டு, சாலையில் சென்ற சக வாகன ஓட்டிகள், மாணவர்களை பத்திரமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கினர். பின்பு, மாற்று பேருந்து வரவழைத்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ – மாணவிகள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

Related Stories: