மாமல்லபுரத்தில் 3 நாள் நடைபெறும் அலைச்சறுக்கு போட்டி தொடங்கியது

 

மாமல்லபுரம், ஜூலை 31: உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு, கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச செஸ் போட்டி நடந்தது. இதில், 186 நாடுகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, காற்றாடி திருவிழா, சர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்த, 2023ம் ஆண்டு ஜி20 கூட்டங்களும் நடந்தது. இதனால், உலக நாடுகளின் பார்வை மாமல்லபுரத்தின் மீது திரும்பியது. இந்நிலையில், இந்திய சர்பிங் அசோசியேஷன் சார்பில் ‘பாயிண்ட் பிரேக் சேலஞ்ச்’ என்ற பெயரில் 3 நாட்கள் நடக்கும் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று காலை தொடங்கியது.

தொடர்ந்து, வீரர் – வீராங்கனைகள் சீறி வரும் கடல் அலையில் அலைச்சறுக்கு பலகைகள் மூலம் சாகசங்களை நிகழ்த்தினர். இப்போட்டியில், தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அலைச்சறுக்கு வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அலைச்சறுக்கு, போட்டியையொட்டி கடற்கரையில் கடலோர காவல் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Related Stories: