செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்களை கலெக்டர் நேரில் ஆய்வு

 

செங்கல்பட்டு, ஆக.3: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஈசூர் மற்றும் ஆனூர் ஆகிய இரு இடங்களை நேற்று செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட தொல்லியல் அலுவலர் இரா.சுபாஷினி உடனிருந்தார். இதில், திருக்கழுக்குன்றம் வட்டதிற்கு உட்பட்ட ஈசூர் மற்றும் ஆனூர் கிராமம் அருகே பாலாற்றின் கரையில் அமைந்துள்ள புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் தயாரிக்கப்பட்ட தொழிற்கூடமாகக் கருதப்படும் தொல்லியல் தளங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலெக்டர் வீரப்பன் கூறுகையில், ஆய்வில் புதிய கற்கால மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகளாக அவர்கள் பயன்படுத்திய கைக்கோடாரிகள் மற்றும் பிற கற்கருவிகளை உருவாக்கவும், அவற்றை செம்மைப்படுத்தவும் பாறைகளின் மேற்பரப்பில் தேய்த்ததால் ஏற்பட்ட தேய்மான எச்சங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.

இச்சான்றுகள், இப்பகுதிகளில் புதிய கற்காலக் கற்கருவிகள் தயாரிப்பு மையமாக விளங்கியுள்ளதனை கிடைக்கப்பெற்ற சான்றுகள் மூலம் தெளிவாக அறியமுடிகிறது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொல்பழங்காலம் முதல் வரலாற்று காலம் வரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை இத்தொல்லியல் சான்றுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதற்கும் இத்தொல்லியல் சான்றுகள் இன்றியமையாதவையாகும். மேலும், ஈசூர் மற்றும் ஆனூர் ஆகிய இரு இடங்களின் வரலாற்று, தொல்லியல் மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளங்களை முறையாகப் பாதுகாப்பது, அவற்றின் வரலாற்றுப் பெருமையை பொதுமக்களிடம் எடுத்துரைப்பது, தகவல் பலகைகள் அமைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்காக இத்தளங்களைப் போற்றி பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொல்லியல் மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பது நமது பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணுவதற்கும், வரலாற்று ஆய்வுகளுக்கு வலுவான ஆதாரங்களை வழங்குவதற்கும் இன்றியமையாததாகும் என்றார்.

 

Related Stories: