மதுராந்தகம், ஜூலை 31: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகள் செல்லியம்மனுக்கும், மணமகன் ஈஸ்வரனுக்கு திருமண விழா கோயில் வளாகத்தில் வெகு விமரிசையாக நடந்தது. இந்த விழாவில் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் செல்லியம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசையாக தாலி, பெட்டி, பழ வகைகள் இனிப்புகள் எல்லாம் கொண்டு சென்று கோயிலில் வைத்தனர். பின்னர், செல்லியம்மனுக்கும் ஈஸ்வரனுக்கும் திருமணவிழா நடைபெற்றது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் என இருதரப்பினரும் பணம் கொடுத்து மொய் எழுதி, இரவு உணவருந்தி சென்றனர். வழக்கமாக அன்றைய இரவு செல்லியம்மன் தேர் வீதி உலா பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகள் தவிர மற்ற பகுதியில் மட்டுமே நடைபெறும்.
இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம். அதன் பிறகு கிராமத்தின் பொது இடத்தில் தேர் நிற்கும். அப்போது அங்கு சென்று பட்டியலின மக்கள் ஒரே இடத்தில் அனைவரும் அம்மனை தரிசிக்க வேண்டும். இந்தநிலையில் பட்டியலின மக்களும், தங்கள் பகுதிக்கு தேர் வர வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக விருப்பம் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளபுத்தூர் கிராமத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கலந்து பேசி செல்லியம்மன் தேர் வீதி உலா பட்டியலின மக்கள் வாழும் தெருக்கள் வழியாக செல்வது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சென்ற அம்மன் தேருக்கு அப்பகுதி மக்கள் தீபாரதனை செய்து வழிபட்டனர். பின்பு பெண் வீட்டிலிருந்து புறப்பட்ட செல்லியம்மனுக்கு சீர்வரிசையாக பித்தளை தவளை, சொம்பு அதன் உள்ளே மூன்று வகையான இனிப்புகளை வைத்து பட்டு புடவை, பட்டு வேட்டி, காரம் இனிப்பு, பழவகைகள் வரிசையாக வைத்து மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்ணாகிய செல்லியம்மனை நேற்று காலை 9 மணி அளவில் அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்வு இப்பகுதியில் ஒரு சமூக நீதிக்கான அடையாளமாக இருந்தது. இதுபோன்ற சமூக நீதிக்கான செயல்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
