* 2 பேர் படுகாயம்
* பிரேக் பிடிக்காததால் விபத்தா? விசாரணை
தண்டையார்பேட்டை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் இதர உணவு பொருட்கள் ரயில் மூலம் சென்னைக்கு வருகிறது. ரயில் நிலையத்தில் இருந்து வியாசர்பாடி ரயில்வே குட்ஸ் ஷெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து இன்று காலை ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு, சென்னை தங்கசாலையில் உள்ள உணவு பொருள் குடோனுக்கு ஒரு லாரி புறப்பட்டது. கோயம்பேடு பாரதி நகரை சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவர், லாரியை ஓட்டி வந்தார். சென்னை பேசின் பிரிட்ஜ் மேம்பாலத்தில் வந்தபோது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் லாரி தாறுமாறாக ஓடி, மூலக்கொத்தளம் சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில், 2 பைக்கில் சிக்னலுக்காக காத்திருந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை பதிவாளராக வேலை பார்த்து வந்த முகப்பேரை சேர்ந்த முரளிதரன் (56), ஆவடியை சேர்ந்த கவுதம் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு ஸ்கூட்டியில் நின்றிருந்த சவுகார்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி (45), வியாசர்பாடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (63) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரத்துடன் லாரி டிரைவரை தாக்க சென்றனர்.
தகவலறிந்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டிரைவரை மீட்டு கைது செய்தனர். பின்னர் லாரியை பறிமுதல் செய்தனர். இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வியாசர்பாடி வரை வாகனங்கள் அணிவகுத்தபடி நின்றது. அதே போல் வால்டாக்ஸ் சாலை, புளியந்தோப்பு, மூலக்கொத்தளம், தங்க சாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
