சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 ( Shift I 101022 மற்றும் Shift II 25937) இடங்கள் உள்ளன. இப்படிப்புகளில் மாணவர்கள் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2026-27ம் கல்வியாண்டில் இப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கி, 29ம் தேதி வரை பெறப்பட்டது. தொடர்ந்து, இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக மீண்டும் ஜூன் 1 முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
மாணவர்கள் www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தாங்கள் விரும்பப்படும் பாடப்பிரிவுகளை ேர்வு செய்து விண்ணப்பித்தனர். அதன்படி, இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 2ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கல்லூரி வாரியாக நடைபெற்றது. இதேபோன்று, பொதுப் பிரிவினர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 3ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்றுமுதல் பொதுக்கலந்தாய்வு தொடங்கப்படுள்ளது.
கல்லூரி வாரியாக வரும் 18ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 15ம் தேதி தொடங்க உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொருத்தவரை ஒரு சில கல்லூரிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மாநில கல்லூரியில் உள்ள 2,380 இடங்களுக்கு 46 ஆயிரம் மாணவர்கள் பலவகையான பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இன்று காலை தொடங்கிய பொது பிரிவினருக்கான கலந்தாய்வில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கட் ஆப் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதுகுறித்து பேசிய சென்னை மாநில கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில்: கடந்த 5 வருடங்களாக அகில இந்திய ரேங்கில், சென்னை மாநிலக் கல்லூரி முதல் 10 இடங்களுக்குள் வருவதால் இக்கல்லூரியில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில கல்லூரியில் விண்ணப்பித்துள்ளனர். முதன் முறையாக 22 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.அதிகபட்சமாக சென்னை, விழுப்புரத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
