×

தாயிடம் இருந்து பிரிந்து கிராமத்தில் வலம் வரும் குட்டி யானை: பொதுமக்கள் பாசம்

 

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டி யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல், மீண்டும் மீண்டும் கிராமத்திற்குள் வலம் வருகிறது. மேலும், பொதுமக்கள் வழங்கும் உணவு மற்றும் தண்ணீரை குட்டி யானை உட்கொண்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாயிடம் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று, மாரசந்திரம் கிராமத்தில் தஞ்சமடைந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானை பிடித்து காட்டிற்குள் கொண்டு சென்று விட்டனர்.

ஆனால் மீண்டும், மீண்டும் கிராம பகுதிக்கு திரும்ப வந்து குட்டி யானை சுற்றி வந்தது. அதன் பின்னர், வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அடர்ந்த காட்டிற்குள் விட்டனர். கடந்த சில மாதங்களாக தென்படாத அந்த குட்டி யானை, கடந்த 4ம் தேதி காலை மீண்டும் சாப்பரானப்பள்ளி கிராமத்திற்குள் வந்தது. அந்த குட்டி யானை போதிய உணவு கிடைக்காமல் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டது. பொதுமக்கள் குட்டி யானையை கண்டு வருத்தமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், கிராமத்துக்கு வந்து குட்டி யானையை பட்டாசு வெடித்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில், நேற்று காலை கவிலட்சுமி நரசிம்மர் கோயில் அருகே உள்ள தனியார் பண்ணை அருகே, உணவு தேடி குட்டி யானை வந்தது. இதையறிந்த பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள், குட்டி யானைக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்கினர். பொதுமக்கள் அளித்த உணவை வாங்கி சாப்பிட்டு விட்டு அங்கேயே நின்று கொண்டது. இதுகுறித்த தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், உடனடியாக அங்கு வந்து யானையை அருகில் உள்ள காட்டிற்கு விரட்டிச் சென்றனர்.

இந்த குட்டி யானை பொதுமக்களை அச்சுறுத்துவது இல்லை. இயல்பாக பழகி வருகிறது. எனவே, யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து உடல் மெலிந்த நிலையில் காணப்படும் குட்டி யானையை, வனத்துறையினர் சரணாலயத்திற்கு கொண்டு சென்று வளர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thenkanikottai ,Krishnagiri district ,Thenkanikottai… ,
× RELATED இன்ஸ்டாகிராம் பெண்ணுக்காக காவல்...