கோவை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., கோவை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்போது, தேர்தல் வாக்குறுதிகளில் எதையெல்லாம் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றச்செயல் தடுப்பு, போதை பொருள் நடமாட்டம் பெரும் சவால்தான். இவற்றை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது. காலஅவகாசம் தேவை என முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை காலஅவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு துரை வைகோ கூறினார்.
