×

ரூ.18,600 கோடி முதலீட்டில் எல் அண்டு டி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: ரூ.18,600 கோடி முதலீட்டில் எல் அண்டு டி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளன. சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழுமங்களில் ஒன்றான லார்சன் அண்டு டூப்ரோ லிமிடெட் (எல்அண்டு டி) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.என்.சுப்ரமணியன் சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில் துறையில் வலுவான தடம் பதித்துள்ளதையும், தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளில் மேலும் ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளதையும் தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டினார். மேலும், தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது எல் அண்டு டி நிறுவனத்துடன் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்க திட்டம், கோயம்புத்தூரில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தி திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில், ரூ.1,100 கோடி முதலீட்டில் 5,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி எல் அண்டு டி கப்பல் கட்டும்தளம் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முதல்வராக விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை, எல் அண்டு டி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுப்ரமணியன், முன்முயற்சிகள் மேம்பாட்டு பிரிவு தலைவர் சத்யநாராயணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* திமுக ஆட்சியிலேயே மேற்கொண்ட ஒப்பந்தம்
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது. கொரோனா சவால்கள் இருந்தபோதிலும், ஆட்சிக்கு வந்த உடனேயே மாநிலத்தின் வளர்ச்சியில் முனைப்புக்காட்டி, பல்வேறு முதலீடுகளை கொண்டு வந்தது. இதன்படி ஆட்சிக்கு வந்த ஆண்டிலேயே, அதாவது 2021 நவம்பர் மாதத்தில் கோவையில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற மாநாடு நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரத்தில் தரவு மையம் அமைக்க எல் அண்ட் டி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்தது. அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், எல் அண்ட் டி தரவு மைய வர்த்த பிரிவு தலைவரும் நிறுவன துணை தலைவருமான சுதிர் எல்.மகாராஜன், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu government ,L&T ,Chennai ,Chief Minister ,Vijay… ,
× RELATED 49 நாள் கோடை விடுமுறைக்குப் பிறகு...