×

எல்லாவற்றிற்கும் திமுக மீது பழி போட்டுத் தப்பித்துவிட முடியாது கவர்ச்சி அரசியலுக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது: களத்தில் யார் உண்மையான எதிரி என்பது தெரியாமல், இல்லாத எதிரியுடன் சண்டை போட்டிருக்கிறோம்.

அதை நாம் புரிந்து கொண்டு தான் ஆக வேண்டும். எங்கே தவறவிட்டோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மீது அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் இருந்து விட்டோம். ஊர் ஊராகப் போய் ஓட்டு கேட்டோம். தெருத் தெருவாக ஓட்டு கேட்டோம். ஆனால், நம் வீட்டில் இருக்கக்கூடிய, நம் குடும்பத்தினரிடம் ஓட்டு கேட்க மறந்துவிட்டோம். நம் வீட்டில் இருக்கக்கூடிய நம் பிள்ளைகளிடம், நம் உறவினர்களிடம், நம் சாதனைகளைச் சொல்லத் தவறிவிட்டோம். இனி வரும் காலங்களில், அந்தத் தவறை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.

முதலில் நம் வீட்டுப் பிள்ளைகளை அரசியல் படுத்த வேண்டும். கலைஞரின் திட்டங்களை, நாம் கொண்டு வந்த சாதனைகளை இப்போது இந்த ஆட்சியில் நடக்கக்கூடிய அலங்கோலங்களை எல்லாம், தினமும் நம் வீட்டில் நாம் பேச வேண்டும். இன்று இந்தப் புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆகிவிட்டன. உருப்படியாக ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? ஒரு திட்டமும் கிடையாது.

ஏற்கனவே பணியில் இருக்கக்கூடிய காவல் துறையினரின் வாகனத்துக்கு, வெறும் ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி, `சிங்கப்பெண் திட்டம்’ என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று சொல்லி, அதையும் கொண்டுவர முடியாத நிலைமையில் தான் இன்று இந்த ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. அதாவது ஒரு கூடுதல் செலவு இல்லாத ஒரு திட்டத்தைக் கூடத் தொடங்கி வைப்பதற்கு வக்கில்லாத ஒரு `சோபா மாடல் ஆட்சி’ இன்று நடந்து கொண்டு இருக்கிறது.

`ஒரு கோமாளி அரண்மனைக்குப் போவதாலேயே, அவன் அரசன் ஆகிவிட மாட்டான். அந்த அரண்மனை தான் சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இன்று அது நம் கண் முன்னாடி நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் ஒரு கோமாளி இல்லை, எல்லாமே கோமாளிகள் தான். எந்தப் பிரச்சினையைக் கேட்டாலும் தி.மு.க. எதைப்பற்றிக் கேட்டாலும் தி.மு.க செய்கின்ற சதி.

எல்லாவற்றிற்கும் தி.மு.க மீது பழி போட்டுத் தப்பித்துவிடலாம் என்று நினைக்கிற உங்கள் கனவு இன்று ஒரு நாள் பலித்திருக்கலாம், என்றைக்கும் பலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உங்கள் முகத்திரையைக் கிழிப்பார்கள்,உங்கள் உண்மையான முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். இந்தக் கவர்ச்சி அரசியலுக்கு நிச்சயம் ஒரு முடிவுரை எழுதுவார்கள். இவ்வாறு கூறினார்.

Tags : DMK ,Udhayanidhi Stalin ,Chennai ,Chepauk-Thiruvallikeni ,
× RELATED சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும்...