×

தமிழ்நாட்டில் 152 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு”களுக்கான 152 இடங்களை “அகில இந்திய தொகுப்பிற்கு” மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் 29.5.2026 அன்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது என்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது.

இந்த வழக்கில் திமுக அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வதை தடுத்து வைத்திருந்தது. இப்போதோ இந்த வழக்கில், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே “அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்” என ஒப்புக்கொண்ட காரணத்தால், “நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும்” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் இடஒதுக்கீடு, திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022ல் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது.

அது பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது. ஆகவே முதல்வர் இதில் தலையிட்டு, 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,All India Pool ,Udhayanidhi Stalin ,Chief Minister ,Vijay ,Chennai ,Opposition Leader ,All ,India Pool ,Tamil ,Nadu ,Udhayanidhi… ,
× RELATED 49 நாள் கோடை விடுமுறைக்குப் பிறகு...