×

ஓராண்டில் மோடி பிரதமராக இருக்க மாட்டாரா? பீதியை கிளப்புகிறார் ராகுல் காந்தி: பாஜ சரமாரி பதிலடி

புதுடெல்லி: நாட்டில் ஸ்திரத்தன்மையின்மையை உருவாக்கும் பொய் பிரசாரத்தை பரப்பும் ராகுல் காந்தி அரசியல் லாபத்திற்காக பீதியை கிளப்புவதாக பாஜ கட்சி கடும் பதிலடி கொடுத்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொருளாதார சுனாமி வர இருப்பதாகவும், அரசு அமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியால் இன்னும் ஓராண்டில் பிரதமராக மோடி இருக்க மாட்டார் என்றும், மக்கள் தரும் நெருக்கடியை தடுக்க எமர்ஜென்சி போன்ற நடவடிக்கையை மோடி எடுக்கலாம் என்றும் கூறினார்.

இதற்கு பாஜ கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் நேற்று கடும் பதிலடி கொடுத்துள்ளனர். பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கூறியதாவது: ராகுல் காந்தி, நெருக்கடி நிலை வரலாற்றைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அனைவரும் நெருக்கடி நிலையை திணிக்கப் பார்க்கிறார்கள் என யோசிக்கிறார். இந்தியாவில் அரசியலமைப்பு ஒரே ஒருமுறை மட்டுமே நசுக்கப்பட்டது.

அதை செய்தவர் இந்திரா காந்தி. இப்போது உண்மையில் நெருக்கடி நிலையானது காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறது. காங்கிரசுக்குள் நிறுவனச் சரிவும் கிளர்ச்சியும் உள்ளது. அமைப்பு ரீதியான முறிவு உள்ளது. நாட்டின் அரசு அமைப்புகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை வைத்து வெளிநாடுகளில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர் ராகுல் காந்தி.

நீங்கள் எதிர்க்கட்சி தலைவர் அல்ல. பொய் பிரசாரத்தின் தலைவர். பொய்களை பரப்புவது, பீதியை உருவாக்குவது, அரசியல் லாபம் ஈட்டுவது அதுதான் உங்கள் மாடல். இந்தியாவை அவதூறு செய்யும் செயல்திட்டத்தை நிறுத்துங்கள். அரசியல் லாபத்திற்காக பீதியை கிளப்பும் அரசியலை நிறுத்துங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜவின் மற்றொரு தேசிய செய்தி தொடர்பாளரான பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘‘நாட்டில் ஸ்திரத்தன்மையின்மையை உருவாக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அராஜகத்தை பரப்பும் சக்திகளுடன் அவர் இணைந்து விட்டார். ராகுல் காந்தி ஒரு அராஜகவாதி. ஜார்ஜ் சோரோஸும் ராகுல் காந்தியும் நாட்டில் குழப்பத்தை உருவாக்க விரும்புகின்றனர். ராகுல் காந்தி அளவுக்கு இந்தியாவை வெறுக்கும் அரசியல் தலைவரை நான் பார்த்ததில்லை. ராகுலின் செயல்பாட்டு முறை நாட்டிற்கு ஆபத்தானது’’ என்றார்.

* ராகுல் கூறும் எதுவும் உண்மையாவதில்லை
பாஜ தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் அமித் மால்வியா கூறுகையில், ‘‘ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய சதி திட்டத்தை வெளியிடுகிறார் ராகுல் காந்தி. முதலில் ஜனநாயகம் முடிந்து விட்டது என்றார். பிறகு, அரசு அமைப்புகள் கைப்பற்றன என்றார். தேர்தல் முறைகேடு என்றார். இப்போது நெருக்கடி நிலை வரவிருக்கிறது, பொருளாதார சுனாமி நெருங்குகிறது என்றார். ஆனால் அவர் கூறிய எதுவும் ஒருபோதும் உண்மையாவதில்லை. ராகுல் காந்தி பீதியை விற்பதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Modi ,Rahul Gandhi ,BJP ,New Delhi ,Congress ,Delhi ,Lok Sabha ,Opposition ,Rahul… ,
× RELATED இந்தியா, வங்கதேசம் இடையே வரும் 8ல்...