×

ஆசிரியர்கள் கருத்தை கேட்காமல் சிபிஎஸ்இயின் ஓஎஸ்எம் முறை அவசரமாக கொண்டு வரப்பட்டது: பெற்றோர் சங்கம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் ஓஎஸ்எம் எனப்படும் டிஜிட்டல் வழி மதிப்பீட்டு முறையில் திருத்தப்பட்டு வெளியான முடிவுகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இதுதொடர்பாக டெல்லி பெற்றோர் சங்க தலைவர் அப்ரஜிதா கவுதம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஓஎஸ்எம் டிஜிட்டல் மதிப்பீட்டு முறைக்கான சோதனை குறுகிய காலத்திற்கு மட்டுமே நடத்தப்பட்டது.

அதில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபட்டனர். இதில் ஆசிரியர்களிடம் இருந்து முறையாக கருத்துக்கள் பெறப்படவில்லை. பயிற்சி, முறையான தயாரிப்புக்காக அவர்களுக்கு போதுமான நேரமும் தரப்படவில்லை. ஓஎஸ்எம் செயல்முறையில் உள்ள பிரச்னைகள் குறித்து மாணவர்கள் இவ்வளவு ஆதாரங்களை பகிர்ந்து கொண்ட பிறகும் அதிகாரிகள் எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறுவது மிகவும் வருத்தமளிக்கிறது.

தவறுகள் நடந்திருக்கலாம் என ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்? இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பல மாணவர்களால் அவர்களின் மறுமதிப்பீட்டிற்கான விடைத்தாள் ஸ்கேன் நகல்களைக் கூட பெற முடியவில்லை. அவர்கள் எப்படி நிவாரணம் தேடுவார்கள். இதுதவிர, விடைத்தாள் திருத்தும் பணியில் முதுகலை ஆசிரியர்களுடன் பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் தரவுகள் பொது வெளியில் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : CBSE ,Parents' Association ,New Delhi ,Delhi Parents' Association ,President ,Abrajita Gautam ,
× RELATED உ.பி-யில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து