சென்னை: பாஜக – தவெக பெயர்கள் வெவ்வேறானாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டனர் என திமுக குற்றம் சாட்டியுள்ளது. ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மதச்சார்பின்மையிலும் தவெக அரசு தோல்விடையந்துள்ளது என திமுக கூறியுள்ளது.
இது தொடர்பான திமுக வின் சமூக வலைதள பதிவில்;
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி இரண்டாக உடைக்கப்படுகிறது. எதிர்க்கட்சி MLA-க்களில் பெரும்பகுதியினர் தனிக்குழுவாகப் பிரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். சட்டப்பேரவைத் தலைவரும் இந்த திடீர்க் குழுவையே அங்கீகரிக்கின்றார்.
Sounds familiar?
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை உடைத்து, தூயசக்தி த.வெ.க. நடத்திய ஜனநாயகக் கேலிக்கூத்தைப் பற்றி நாம் பேசவில்லை. இது மேற்கு வங்கத்தில் அவர்களது “கொள்கை எதிரி” பா.ஜ.க. செய்த செயல். தமிழ்நாட்டில் த.வெ.க. ஒருபடி மேலே சென்று MLA-க்களை விலைக்கே வாங்கிவிட்டனர். பா.ஜ.க. – த.வெ.க. பெயர்கள் வெவ்வேறானாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டனர்.
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தைத் திரையிடத் தடை, பக்ரீத் குர்பானி கொடுக்கத் தடை என மதச்சார்பின்மையிலும் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மண்டையில் இருக்கும் கொண்டை வெளியே தெரிந்துவிட்டது. கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவியதற்கும் கண்டனம் தெரிவிக்காமல் கப்சிப்.
மிச்சம் இருப்பது மாநில உரிமை. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஒன்றிய அரசிடம் தெளிவுரை கேட்டு அதிலும் மண்டியிடத் தயார் என்ற சிக்னலை டெல்லிக்குக் கொடுத்து விட்டது இந்த அரசு. மொத்தத்தில், ஜனநாயக – மதச்சார்பற்ற – மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஓர் அரசு அமைவதற்காகத்தான் ஆதரவு தருகிறோம் என்று சொன்ன கட்சிகளின் முகத்தில் ஒரே மாதத்தில் ஒரு லோடு கரியைப் பூசியிருக்கிறார்கள். இவர்களும் வாய்பேச முடியாமல் தவிக்கிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
