அரசு பஸ் மோதி பெண் பலி

திண்டுக்கல், ஜூன் 4: திண்டுக்கல் அருகே அரசு பஸ் மோதியதில் நடந்து சென்ற பெண் பலியானார். திண்டுக்கல் அருகே சிறுமலை அண்ணா நகரை சேர்ந்த தனராஜ் மனைவி சரோஜா (45). இவர் நேற்று முன்தினம் மாலை பழையூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திண்டுக்கல்லை நோக்கி அரசு பஸ் வந்தது.

பஸ்சை திண்டுக்கல் நல்லாம்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (57) என்பவர் ஒட்டி வந்தார். பழையூர் பஸ் ஸ்டாப் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு மீண்டும் பஸ் புறப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நடந்து சென்ற சரோஜாவின் சேலை பஸ்சின் முன் பகுதியில் உடைந்த நிலையில் இருந்த பம்பரில் மாட்டியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சரோஜாவை சிறிது தூரம் பஸ் தர தரவென இழுத்து சென்றது.

இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சரோஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஐ கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: