பெரும்புதூர், ஜூன் 4: பெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் மதிய உணவு சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் 44 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்புதூர் அருகே பிள்ளைபாக்கம் பகுதியில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் ஷிப்ட் அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல ஊழியர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், நேற்று மதிய உணவாக சிக்கன் பிரியாணி மற்றும் வெஜ் பிரியாணி வழங்கபட்டுள்ளது.
உணவு உட்கொண்ட சில மணி நேரத்தில், தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோருக்கு முதல் கட்டமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகினர். சில நிமிடங்களில் உணவு உட்கொண்ட அனைவருக்கும் லேசான தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் மினி வேன்கள் மூலம், மயக்கமடைந்த தொழிலாளர்கள் பென்னலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உடல் நலம் பெரிதும் பாதிப்படைந்த 5 பேருக்கு மட்டும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும், வெளிநோயாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த அமைச்சர் தென்னரசு, பெரும்புதூர் சார் ஆட்சியர் நல்லசிவன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளர்களிடம் நலம் விசாரித்து, ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மருத்துவரிடம், உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினர்.
