பொள்ளாச்சி: அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகவும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சியில் உள்ள ஜெயராமன் இல்லத்திற்கு நேற்று வந்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அங்கு வந்தார். அஞ்சலி செலுத்தி முடித்துவிட்டு எஸ்.பி.வேலுமணி வெளியே வந்த போது, அவரை பார்த்து அதிமுக தொண்டர் ஒருவர் துரோகி வேலுமணி ஒழிக… என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த மற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேலுமணியின் ஆதரவாளர்கள் உடனடியாக அந்த நபரை நோக்கி பாய்ந்து சரமாரியாக தாக்க முயன்றனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்த இடமே போர்க்களமாக மாறியது. பின்னர், அங்கிருந்த பிற தொண்டர்கள் மற்றும் காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்து இருந்தனர். இதனால், அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. இதன்பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தது. இந்த விவகாரத்திற்காகத்தான், அந்த தொண்டர் அவ்வாறு முழக்கங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. சொந்த கட்சி தலைவருக்கு எதிராக பகிரங்கமாக முழக்கமிட்ட அந்த தொண்டர் யார், அவருக்கு பின்னணியில் வேறு ஏதேனும் உட்கட்சி தலைவர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்து அதிமுக தலைமை ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
