சென்னை, ஜூன் 2: தனிக்கட்சி தொடங்க போகிறார் என்ற பரபரப்புக்கு மத்தியில் அண்ணாமலை நேற்று மாலை அவசரம் அவசரமாக டெல்லி சென்றார். டெல்லியில் இன்று பாஜ தேசிய தலைவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கட்சிப் பதவியை வாங்குவதற்காக அவர் தனிக் கட்சி விவகாரத்தை கிளப்பிவிட்டிருப்பதாக புகார்கள் எழுகின்றன. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை 2021 ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக இருந்த போது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, சரமாரியாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் \\”என் மண், என் மக்கள்\\” எனும் யாத்திரையை நடத்தி பாஜவின் கட்டமைப்பை பலப்படுத்தினார். இதனால் அவருக்கென தனி ரசிக பட்டாளமே உருவானது. தொடர்ந்து, 2025ம் ஆண்டு வரை அவர் தலைவர் பதவியில் நீடித்தார். தொடர்ந்து பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கென ஆதரவாளர்கள் இன்னும் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அவருக்கு இதுவரை பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் கூட அண்ணாமலைக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ எந்த சீட்டும் வழங்கவில்லை. அண்ணாமலையின் ஆதரவாளர் அமர் பிரசாத் ரெட்டி தனக்கு சீட் கொடுக்கும் என நினைத்து பிரசார வாகனத்தை வாங்கி வைத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து பாஜவில் இருந்து அண்ணாமலை ஓரங்கப்படுத்தப்பட்டு வந்தார். அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக பலர் புதுக்கட்சி தொடங்குமாறு கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவரது ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கட்சிப் பெயர்கள், கொடி வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
பாஜவில் எந்தவொரு பொறுப்பிலும் அண்ணாமலை இல்லை. என்றாலும் கூட, அவரது கருத்துகளும் அறிக்கைகளும் எப்போதுமே பேசுபொருளாகும். அந்த வகையில், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து மும்மொழிக் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தும் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை அண்மையில் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. மத்திய அரசின் எந்த திட்டத்துக்கும் முதல் ஆளாக ஆதரவுக் குரல் கொடுப்பவர், முதன்முறையாக எதிர்ப்புக்குரலை ஓங்கி ஒலித்தார். இது கட்சிக்குள் பெருத்த சலசலப்பை உண்டாக்கியது. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார். அதனால் தான் ஒன்றிய பாஜ அரசை விமர்சிக்க தொடங்கியிருக்கிறார் என்று பாஜவில் உள்ளவர்களே பேச தொடங்கினர்.
அதே நேரத்தில் வருகிற 4ம் தேதி அண்ணாமலை பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் அவர் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் புதிய கட்சி தொடர்பாக போஸ்டர்களை ஓட்டி வருகின்றனர். கட்சிக்கு பெயர் கூட பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை புதிய கட்சி தொடங்க போவதாக அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிக்கவில்லை. அவர் எண்ண முடிவு எடுக்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய கட்சி தொடங்கும் பட்சத்தில் தமிழக இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அதிலும் கொங்கு மண்டலத்தில் வரும் பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதை பாஜ தடுத்து நிறுத்தி அவரை சமாதானம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கட்சியில் பவியை வாங்குவதற்காகவே அவர் இவ்வாறு வதந்தியை கட்சியினர் மூலம் கிளப்பி விட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் காலியாகும் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலைக்கு எம்பி பதவி கொடுத்து அவரை மத்திய அமைச்சராக்கும் திட்டமும் பாஜ தலைமையிடம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், ஒரு நாள் முன்னதாக நேற்று மாலையே அவசரம், அவசரமாக அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள அண்ணாமலை இன்று காலை பாஜ தேசிய தலைவர் நிதின் நிபினை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜ தேசிய தலைவரிடம் அண்ணாமலை தனது நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கட்சிப் பதவியை வாங்குவதற்காக அவர் தனிக் கட்சி விவகாரத்தை அவரே கிளப்பிவிட்டிருப்பதாக புகார்களும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘இன்னும் 2 நாள் பொறுத்துக்கொள்ளுங்கள்’’
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரிடம், ‘‘உங்கள் டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன? கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? நீங்கள் புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது, அது உண்மையா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். இந்த கேள்விகளுக்கு அண்ணாமலை நேரடியாக பதில் அளிக்காமல், ‘இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு நாம் அனைவரும் உட்கார்ந்து பேசுவோம். அப்போது நீங்கள் எந்த கேள்விகளை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நான் உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் முழுமையாக பதில் அளிக்கிறேன்’ என்ற ஒரே பதிலை தெரிவித்துவிட்டு விமான நிலையத்திற்குள் சென்று விட்டார்.
டெல்லி பயணத்தில் பாஜ தேசிய தலைவர் நிதின் நிபின் உள்ளிட்ட முக்கிய தேசிய நிர்வாகிகளை அண்ணாமலை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, டெல்லியில் நடைபெறும் பாஜ தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க ஏற்கனவே டெல்லி சென்று உள்ளனர். ஆனால், அண்ணாமலை அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
