சிவகிரி: திமுகவை குறை சொல்லிக் கொண்டே தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை திசை திருப்ப முயற்சிப்பதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்று திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி கூறினார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை நேற்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரப்போவதாக தெரியவில்லை.
அதுகுறித்து இன்னும் அறிக்கை வரவில்லை. அதனால் அதைப் பற்றி நாம் கருத்து சொல்வதற்கில்லை. தவெக ஆதரவு கட்சிகள் திமுகவை தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் இன்று ஆளும் கட்சியுடன் இருக்கிறார்கள். அவர்கள் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை தான் அறிய வேண்டுமே தவிர, திமுகவை குறை சொல்லிக் கொண்டிருப்பதால் பயனில்லை.
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எல்லாம் மக்கள் மறந்து விடமாட்டார்கள். அவர்களை திசை திருப்ப திமுகவுக்கு எதிராக கருத்து சொல்லி திசை திருப்ப வேண்டாம்’ என்றார்.
