உளுந்தூர்பேட்டை, மே 26: கடலூர் மாவட்டம் நரசிங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (35). இவர் வெளிநாடு செல்வதற்காக தனது மனைவி சரண்யா (27), குழந்தைகள் செங்காந்தள் (3), சித்தார்த்தன் (2) ஆகியோருடன் பெண்ணாடத்தில் இருந்து ஒரு வாடகை காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த காரை வேப்பூர் அருகே ஐவதுகுடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (34) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த கார் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் மழை மாரியம்மன் கோயில் எதிரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதனால் கார் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் காரை ஓட்டிச் சென்ற சுரேஷ்குமார் மற்றும் காரில் சென்ற சுதாகர் உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதே போல் பைக் ஓட்டிச் சென்ற லட்சுமணன் (29) என்பவரும் படுகாயமடைந்தார். இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார், படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
