புதுச்சேரி, ஆக. 1: ‘பாரத் தர்ஷன்’ திட்டத்தின் கீழ், இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது கவர்னர், நீங்கள் ஒரு போலீஸ் உயர் அதிகாரியாக சமூகப் பிரச்னையை மக்கள் பார்வையில் இருந்தும் அணுக வேண்டும். ஏனென்றால், களத்தில் மக்களை சந்திப்பவர்கள் நீங்கள் தான். நீங்கள் நேர்மையாக செயல்படும்போது உயர் அதிகாரிகளும், தலைவர்களும் உங்களை அங்கீகரிப்பார்கள். நாட்டின் வளர்ச்சியே உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் உங்களுடைய பங்கு அதிகம். உங்களுடைய துறையில் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்.
