தனது மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கலெக்டருக்கு ரூ.20ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்ற விவசாயி

 

விழுப்புரம், ஆக. 4:விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடந்தது. அப்போது மனு அளிக்க வந்த ஒருவர், தனது மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மானிடம் ரூ.20,000 லஞ்ச பணம் கொடுக்க வந்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை தடுத்து நிறுத்திய நிலையில், அவர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், எனக்கு சொந்தமான நிலத்தில் நான் அளவீடு செய்வதற்கு உயர்நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கி உள்ளேன்.

ஆனால் பக்கத்து நிலத்துக்காரர்கள் என்னை அளவீடு செய்வதற்கு விடுவதில்லை. ரவுடிகளை வைத்துகொண்டு மிரட்டி வருகின்றனர். இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. எங்கள் கிராமத்தில் சர்வே எண் 6/2இ பகுதியில் இன்றுவரை பாகம் உள்ளது. மின்சர்வீஸ் எண்ணிலும், மின்மோட்டாரிலும் பாகம் உள்ளது. ஆனால் பக்கத்து நிலத்துக்காரர்கள் எனக்கு பாகம் இல்லை என்று அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக எனக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அடமானம் என்ற பெயரில் சொத்தை கிரயம் செய்துகொண்ட பட்டாவும் மாவட்ட பதிவாளரால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடமானம் என்ற பெயரில் மோசடி செய்த குற்றத்திற்காக இவர்கள் மீது வளத்தி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்கில் உள்ள சொத்துக்களை சட்டத்திற்கு புறம்பாக அத்துமீறி பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்னுடைய பாகத்தை பிரித்து பட்டா வழங்க வேண்டும். அதிகாரிகளிடம் சென்றால் பணம்கேட்டு அலைக்கழிக்கிறார்கள். இதனால் லஞ்ச பணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன், என்றார். தொடர்ந்து கலெக்டருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: