அரசு பல் மருத்துவமனை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 3 இளைஞர்கள் அதிரடி கைது

 

புதுச்சேரி, ஆக. 3: புதுச்சேரி கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோரிமேடு அரசு பல் மருத்துவ கல்லூரி அருகே சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 ஆசாமிகளை பிடித்து விசாரித்தனர்.அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், திலாசுபேட்டை தீபக் (18), ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார்(21), அரியாங்குப்பம் மோகன் பிரசாத் (18) என்பது தெரியவந்தது. பணத்துக்காக சிறுவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா, 3 செல்போன், ரூ.22 ஆயிரம் ரொக்க பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: