மோதிரமலை பகுதியில் பால பணிகள்: கலெக்டர் ஆய்வு

 

நாகர்கோவில், மே 26: கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட மோதிரமலை கோலிஞ்சிமடம் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுதல் பணியினை மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சிக்குட்பட்ட மோதிரமலை, கோலிஞ்சிமடம் பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஓடை குறுக்கு பாலம் கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மலைக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் இந்தப் பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. பணிகளை எவ்வித தொய்வுமின்றி, தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Related Stories: