மணவாளக்குறிச்சி அருகே தென்னந்தோப்பில் தோழியுடன் சுற்றிய சிறுவன்: கண்டித்த தொழிலாளி மீது தாக்கு : 3 பேர் மீது வழக்குப்பதிவு

 

குளச்சல், மே 26: மணவாளக்குறிச்சி அருகே தென்னந்தோப்பில் மறைவான இடத்தில் தோழியுடன் இருந்த சிறுவனை கண்டித்ததால் தொழிலாளி சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மணவாளக்குறிச்சி அருகே கல்படி கோட்டவிளையை சேர்ந்தவர் குமரேசன் (53). கூலித்தொழிலாளி. வேலைக்கு செல்லும் நேரம் போக பெரியகுளம் ஏலா என்ற இடத்தில் உள்ள தென்னந்தோப்பில் கீழே விழுந்து கிடக்கும் மட்ைட, ஓலை, தேங்காய்களை எடுக்க செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் குமரேசன் தென்னந்தோப்புக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு திங்கள்சந்தை பிலாக்கோடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் தனது தோழி ஒருவரோடு நின்று போட்டோக்கள் எடுத்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்துக்கு பின்னர் சிறுவன் தனது தோழியை தோப்பில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றாராம். இதனை கண்ட குமரேசன் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு சென்று சிறுவனிடம் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தோழியை அழைத்து கொண்டு வரக்கூடாது என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், குமரேசனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவரை அடிக்க பாய்ந்து இருக்கிறார்.

சிறுவனிடம் ஏன் தகராறு என நினைத்த குமரேசன் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் இருந்த சிறுவன் தனக்கு தெரிந்த நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு தென்னந்தோப்புக்கு வந்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்துக்கு பிறகு குமரேசன் மீண்டும் தென்னந்தோப்புக்கு மட்ைட, ஓலை சேகரிக்க சென்றார். அப்போது தயாராக காத்திருந்த சிறுவன் உள்பட கண்டால் தெரியும் 2 பேர் குமரேசனிடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர். அப்போது சிறுவன் தான் வைத்திருந்த கம்பால் குமரேசனை சரமாரியாக தாக்கினார். மற்ற 2 பேரும் கைகளால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குமரேசன் சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்து ஆட்கள் வந்துள்ளனர். சுதாரித்து கொண்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் தோப்புக்கு வந்தவர்கள் குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நெல்சன் தென்னந்தோப்பில் தொழிலாளியை சரமாரியாக தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: