இன்னமும் பாடம் கற்கவில்லையா? நீட் விவகாரத்தில் தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி: ஒன்றிய அரசு, சிபிஐ பதிலளிக்கவும் நோட்டீஸ்

 

புதுடெல்லி: மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்காக தேசிய அளவில் நடத்தப்படுவது நீட் நுழைவுத் தேர்வு ஆகும். இதில் 2026 நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதி இருந்தனர். இருப்பினும் வினாத்தாள் கசிவு காரணமாகதேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நீட் மறு தேர்வு வரும் ஜூன் 21ம் தேதி மீண்டும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நீட் யுஜி 2026 தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமையை மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இந்த விவகாரத்தில் பல பிரச்சனைகள் முன்னதாக எழுந்தும் தேசிய தேர்வு முகமை இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று கூறினர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘நீட் அடுத்த தேர்வுக்கான தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுவிட்டது’’ என்று நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள்,‘‘நாங்கள் இப்போது நீட் தேர்வு தேதியை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. கடந்த முறை முறைகேடுகள் நடந்தபோது நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தோம். ஒரு உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதைக் கண்காணிக்கவும் தனிப்பட்ட குழு அமைக்கப்பட்டது.

இவ்வளவு நடந்த பிறகும், இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அது தான் தற்போது மிகவும் வருத்தமளிக்கிறது. குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேசிய தேர்வு முகமை உடனடியாக தனது நிலை அறிக்கையை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதேப்போன்று உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து, அக்குழுவின் தலைவரான கே.ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்குகளின் நகல்களை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதேப்போன்று இந்த விவகாரம், தொடர்பாக மத்திய அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: