திருவனந்தபுரம், மே 25: கண்ணூர் அருகே வீட்டின் இரண்டாவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்த பெண் தொழிலாளியை சக தொழிலாளி காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோழிக்கோடு அருகே உள்ள வளையம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்ஜிஷ், சந்திரிகா (56). இவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளிகள் ஆவர். நேற்று முன்தினம் இவர்கள் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ள பானூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணிக்காக சென்றிருந்தனர்.
அந்த வீட்டில் 2வது மாடியில் ஓடுகளை மாற்றும் பணியில் சந்திரிகா ஈடுபட்டிருந்தார். சஞ்ஜிஷ் கீழே ஒரு வேனின் மேல் நின்றுகொண்டு கயிறு கட்டி ஓடுகளை மேலே ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது சந்திரிகா எதிர்பாராதவிதமாக கால் தவறி 2வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். அப்போது தற்செயலாக அதை கவனித்த சஞ்ஜிஷ் சமயோசிதமாக செயல்பட்டு சந்திரிகாவை தாங்கிப் பிடித்தார். அருகில் நின்று கொண்டிருந்த வேன் டிரைவரும் விரைந்து வந்து அவரை பிடித்துக் கொண்டார்
