திருப்பூர், மே 22: திருப்பூர், நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காங்கேயம் ரோடு பள்ளக்காட்டுபுதூர் பகுதியில் உள்ள தனியார் சூதாட்ட விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் கும்பலாக அமர்ந்திருந்தனர். அந்த கும்பலை சுற்றி வளைத்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தனியார் சூதாட்ட விடுதியில் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விடுதி உரிமையாளர்களான விவின் (40), வினோத் (48), உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் பணம் மற்றும் 4 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
